இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை!
உலகச் சந்தையில் எண்ணெய் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திகளும் இன்னும் சில நாட்களில் நிறுத்தப்படலாம் எனக் கத்தார் எரிசக்தி அமைச்சர் எச்சரித்ததையடுத்து இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தக்கூடும் என்று கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி (Saad al-Kaabi) தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை
இதையடுத்து, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை ஒன்பது சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு பேரல் 93 டொலரைத் தாண்டியுள்ளது.
இது 2023 இலையுதிர்காலத்திற்குப் பின்னரான மிக உயர்ந்த விலையாகும்.

மேலும் தெரிவித்திருந்த அவர், ஈரான் மீதான போர் அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்தால், எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டொலர் வரை உயரக்கூடும் என எச்சரித்துள்ளார்.
அத்தோடு, இந்தப் போர் தொடர்ந்தால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல பொருட்கள்
இதனுடன், எரிசக்தி விலை உயரும் மற்றும் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.

அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக இந்தப் பாதையூடான போக்குவரத்து தற்போது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்தச் சூழல் நீடித்தால் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |