ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
🛑 புதிய இணைப்பு
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பட்டுவத்தை சாமர (Batuwatte Chamara) என அறியப்படும் நபரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னர் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 1:25 மணியளவில், ஜா-எல காவல் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித அன்னாள் வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு நிலையம்
மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் பட்டுவத்தை சாமரவின் மனைவி சதுரிகா வீரசூரிய வசித்து வந்த வீட்டை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த வீட்டின் மீதும், அருகில் உள்ள இரு வீடுகளின் மீதும் சுமார் 23 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த வீடு முதியோர் பராமரிப்பு நிலையமாக (Elderly care home) பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பட்டுவத்தை சாமரவின் மனைவி தற்போது துபாயில் வசித்து வருவதால் இந்த வீடு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதந்தோறும் 125,000 ரூபாய் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் நடந்த போது வீட்டிற்குள் ஒன்பது முதியவர்களும் நான்கு பராமரிப்பாளர்களும் இருந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வீட்டின் மீது கடந்த 2025 டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 24 ஆகிய திகதிகளிலும் இது போன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑முதலாம் இணைப்பு
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (07) காலை ஜா-எல, புனித அன்னாள் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பட்டுவத்தை சாமர (Batuwatte Chamara) என அறியப்படும் நபரின் மனைவியின் வீட்டின் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |