எரிபொருள் விலை அதிகரிப்பு : நிதி தியாகம் செய்யக்கோருகிறார் ட்ரம்ப்
எரிபொருள் விலை அதிகரிப்பு அமெரிக்காவிற்குள் பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெளிவான கருத்தாகும்.
இதன் காரணமாக, போர் சூழலால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையை ஒரு தற்காலிக நிலைமை என விவரித்து ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
குறுகிய காலமே எரிபொருள் விலை உயர்வு
"எரிபொருள் விலை உயர்வு குறுகிய காலமே நீடிக்கும். ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அமெரிக்காவும் உலகமும் செய்ய வேண்டியது ஒரு சிறிய நிதித் தியாகம் மட்டுமே. இதைப் பற்றி வேறுவிதமாகச் சிந்திப்பவர்கள் முட்டாள்கள் மட்டுமே" என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கான காரணங்களை அவ்வப்போது மாற்றி வரும் ட்ரம்ப், தற்போது மீண்டும் ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் குறித்து பேசத் தொடங்கியுள்ளார்.
ஈரானிடம் உள்ள 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு எரிபொருள் கையிருப்பைக் கைப்பற்றுவதற்காக விசேட படைப்பிரிவை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிப்பதாக அவர் ஒருமுறை தெரிவித்திருந்தார்.
அமெரிக்கர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும்
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு அல்லது உலகின் எந்தவொரு போர் வலயத்திலும் அமெரிக்க தரைப்படை வீரர்களை ஈடுபடுத்துவது என்பது அமெரிக்கர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு வாக்களித்த அமெரிக்கர்கள் கூட ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அங்கீகரித்தாலும், தரைப்படை வீரர்களை ஈடுபடுத்துவதை அங்கீகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சரியான சூழல்
இருப்பினும், ஈரானின் ஆட்சி மாற்றத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்ப்பதால், தேவைப்பட்டால் ஈரானில் தரைப்படையினரை நிலைநிறுத்த வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளதாக உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சரியான சூழல் குறித்தும் ஜனாதிபதி ட்ரம்ப் வார இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.
ஈரானில் மீண்டும் ஒரு போரைத் முன்னெடுக்கக்கூடிய அளவிலான இராணுவம் மிஞ்சாத வரை தாக்குதல் நடத்திய பின்னரே போரை நிறுத்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைவதையும் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். அத்தகைய இலக்கை தரைப்படை வீரர்களை ஈடுபடுத்தாமல் அடைய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்
ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதை ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மறுத்துள்ளனர். இது ஈரானின் தாக்குதலால் ஏற்பட்ட விபத்து என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலின் ஆரம்ப நாளிலேயே பதிவான இச்சம்பவம், அமெரிக்காவின் தாக்குதலாலேயே நிகழ்ந்தது என அமெரிக்க உளவுத்துறையின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
போரை முடிவிற்கு கொண்டுவர நெதன்யாகுவுடன் கலந்துரையாடி முடிவு
அதேபோல், ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நெதன்யாகுவுடன் கலந்துரையாடி சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அவர், 'டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்' (Times of Israel) பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்காவைத் தூண்டியது நெதன்யாகு தான் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதையும் இங்கு மறந்துவிட முடியாது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |