மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்
மன்னார் (Mannar) - கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கனிய மணல் அகழ்விற்காக கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகளை அப்பகுதி மக்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.
கடந்த இரண்டு தடவைகள் கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்றைய தினம் (19) மூன்றாவது தடவையாகவும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயத்தை மேற்கொண்ட போதும் இறுதியில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்காத நிலையில் குறித்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நீதிமன்றத்தில் தடை உத்தரவு
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (17) மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இன்று (19) காலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டம் கட்டமாக வருகை தந்தனர்.
இதன் போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற நோக்கத்துடன் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சுமார் 23 திணைக்களங்களின் அதிகாரிகள் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்கு கள விஜயத்தை மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டனர்.
மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கனிய மணல் பரிசோதனைக்கான கள விஜயத்தை மேற்கொண்ட நிலையில் மக்களும் தொடர்ந்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கள விஜயம் உடனடியாக நிறுத்தம்
இதேவேளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மற்றும் இன்று குறித்த கணிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று முன்னெடுக்கப்பட இருந்த கணிய மணல் அகழ்வுக்கான கள விஜயம் உடனடியாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதன் போது பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், உள்ளடங்கலாக கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



