மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதா... விசாரணைகள் தீவிரம்
மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 03.45 மணியவில் மூன்று கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம்
சிறைச்சாலையின் காவலர் அந்த இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் ஒரே நேரத்தில் அவ்விடத்தில் 1,000 பேர் அளவிலான கைதிகள் ஒன்றுக்கூடி கூச்சலிட்டு கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்கள்.
நிலைமையை உணர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள். சிறைச்சாலையில் இருந்த ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏனைய பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைத்ததன் பின்னர் பிரதான இரும்பு கதவுகளை முடியுள்ளனர்.

இதன் பின்னர் கைதிகள் இரும்பு கதவின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சிறைச்சாலையின் சமையல் அறை, உணவு உண்ணும் இடம், வைத்தியசாலை, பதிவு பிரிவு, அலுவலகம் ஆகிய பகுதிகளை கைதிகள் சேதப்படுத்தியுள்ளார்கள். தீ வைத்துள்ளார்கள்.
இவ்வாறான பின்னணியில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலையும், மஹர சிறைச்சாலை மோதலையும் ஒன்றாக கருத முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை.
போராட்டத்துக்கான காரணம்
மூன்று கைதிகள் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன் பின்னர் போராட்டம் தோற்றம் பெற்றது. இந்த போராட்டத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மஹர சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கூண்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை தான் இலக்காக் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஒரே கட்டத்தில் 1,000 பேர் ஒரு இடத்தில் ஒன்றுகூடியது சந்தேகத்துக்குரியது. திட்டமிட்ட செயற்பாடுகள் ஊடாக மஹர சிறைச்சாலையின் கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சித்துள்ளார்கள்.
மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் காணப்படுகிறது. அது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைத்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தற்போது உணவு வழங்கப்படுகிறது. சிறைச்சாலையின் சொத்துகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இது மக்களின் வரிப்பணம் என்பதை கைதிகள் உறவுகள் விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொண்டே மீண்டும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும். தமக்கான வசதிகளையே இவர்கள் இல்லாதொழித்துள்ளார்கள்.

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு எனது தலைமைத்துவத்தில் அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மோதல் ஒரு அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் சிறைச்சாலை திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |