அதிகரிக்கும் பதற்றம் : லஷ்கர்-இ-தொய்பா தலைவருக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்
ஜம்மு - காஷ்மீர் (Jammu & Kashmir ) தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் (Pakistan) வசிக்கும் லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அன்று, ஜம்மு காஷ்மீரின் (Kashmir) பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்பிறகு, இந்திய தரப்பு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடை நிறுத்தம் செய்ததுடன், அட்டாரி எல்லையை மூடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
பகல்காம் தாக்குதல்
மறுபுறம், சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான முடிவு உட்பட இந்தியாவுக்கு எதிரான பல முடிவுகளை பாகிஸ்தானும் அறிவித்தது.
மேலும் காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய இராணுவமும் பதிலடி வழங்கி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.
நான்கு மடங்கு பாதுகாப்பு
இந்நிலையில், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நான்கு மடங்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் மக்கள் தொகை அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியான மொஹல்லா ஜோஹர் டவுனில் அமைந்துள்ள ஹபீஸ் சயீத்தின் வீடு ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பிறகு தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையின் கீழ் வந்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் இயக்கத்தினர் இணைந்து ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிடுகின்றனர்.
மேலும்,ஹபீஸ் தங்கியிருக்கும் வளாகத்தை கண்காணிக்க ட்ரோன் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வீதிகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
