போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றக் குழு ஆய்வு
இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறிமுறைகளைக் கண்டறிந்து, அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு, இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த குழு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது மேற்படி விடயம் தொடர்பில் கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.
விசேட குழு நியமனம்
சிறிலங்கா காவல்துறையினர், தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை இந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த திணைக்களங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்காக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பாரியளவிலான போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை நிறுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை சார்பில் ஆஜரான அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு அண்டை நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் துணை நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை
மேலும், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுபான பாவனையை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய சில ஆலோசனைகளை குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான யோசனைகளை முன்வைத்ததோடு, உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு தற்போதைய துறைகளின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் வழங்க வேண்டும் என குழுவின் தலைவர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில்
இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரன, ஜயந்த சமரவீர, உபுல் கலப்பத்தி, உபுல் மகேந்திர ராஜபக்ஷ,ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.





