நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெட்டப்பட்டது நான்கு இலட்சம்
பொது திறைசேரியால் நிதி வழங்கப்படாமையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அலுவலக தேவைகளுக்காக கொள்வனவு செய்யப்பட்ட பல்வேறு உபகரணங்களுக்கு பணம் செலுத்த முடியாமல் தவிப்பதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக திறைசேரிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை பணம் செலுத்தப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொலைபேசி, கணனி, அச்சு இயந்திரம், தொலைநகல் இயந்திரம் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அரசாங்கம் 400,000 ரூபாவை வழங்கி வருகிறது.
உபகரணங்களை கொள்வனவு செய்து அதற்கான ரசீதுகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நாடாளுமன்ற அலுவல்கள் பிரிவுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர், அவை ஆராயப்பட்டு, அதற்கான கொடுப்பனவுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டன.
எம்.பி.க்கள் கொள்வனவு செய்த பொருட்களுக்கான பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல எம்.பி.க்கள் தங்கள் அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கு உபகரணங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.