பலவீனமான தலைமை எங்கே கொண்டு போகிறது தமிழரசுக் கட்சியை?
இன்னும் சில மாதங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மாகாணசபைத் தேர்தலை மையப்படுத்தி திரைமறைவில் நிறையக் காய்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ராஜதந்திரம் என்ற மூலாம் பூசப்பட்டு, குழி பறிப்புக்கள் , கால் வாருதல்கள் என்று பல நகர்வுகள் பகிரங்கமாகவும், இரகசியமாகவும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கு மாகாணசபைகளை குறிவைத்து தமிழ் கட்சிகள் ஒவ்வொரு வழியாகச் சிந்தித்துக்கொண்டிருக்க, ராஜபக்சக்கள் வகுத்து வருகின்ற வியூகங்கள் அங்கு வெற்றிபெற்றுவிடுமோ என்று அஞ்சத் தோன்றுகின்றது.
வடக்கு கிழக்கு மாகானசபைகளை இப்படித்தான் குறிவைக்கின்றார்கள் ராஜபக்சாக்கள்:
- கிழக்கு மாகாணசபையை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும்.
- வடக்கு மாகாணசபையை எந்தக் கட்சி அமைத்தாலும் அது தம்முடைய ஆதரவின் பெயரிலேயே அமைக்கவைக்கவேண்டும்.
இதுதான் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் ராஜபக்சேக்களின் வியூகம்.
ராஜபக்சக்களது வியூகங்களின் அத்தனை பரிமானங்களை நன்குணர்ந்தும் அதனைத் தடுத்து நிறுத்தவோ மாற்று வியூகம் வகுக்கவோ திராணியற்று தமிழரசுக் கட்சியின் தலைமை தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றபோது வடக்குகிழக்கு வாழ் தமிழ் மக்களின் எதிர்காலம் கைமீறிப்போவதை அவதாணிக்க முடிகின்றது.
கிழக்கைப் பொறுத்தவரையில் ராஜபக்சேக்களின் வியூகம் என்பது, வெற்றியின் பாதையிலேயே நகர்ந்துகொண்டிருக்கின்றது என்றுதான் கூறவேண்டி இருக்கின்றது.
கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் கிட்டத்தட்ட சம வீதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கிழக்கில் தலா ஒவ்வொரு தடவைகள் பதவிவகித்த நிலையில், அடுத்த முதலமைச்சர் பதவி ஒரு சிங்களவரையே வந்தடையவேண்டும் என்பது பிள்ளையான், வியாழேந்திரன் போன்ற தலைமைகளிடம் ராஜபக்சேக்கள் முன்வைக்கின்ற தார்மீகம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கிழக்கில் மகிந்த ஆதரவு சக்திகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது, அவர்களின் இலக்கு அதிக தூரத்தில் இருக்காது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
த.தே மக்கள் முன்னணியானாலும் சரி, விக்னேஸ்வரன் தலைமையிலான அணியானாலும் சரி- இவை இரண்டுமே வடக்கு மாகாணம் சார்ந்த கட்சிகளாகவே முடங்கிவிட்டுள்ளன. கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் இந்த இரண்டு கட்சிகளாலும் அங்கு செய்துவிடமுடியாது.
கிழக்கில் தமிழர் தரப்பு ஒரு முதலமைச்சர் பதவியைப் பெறுவதானால், அது தமிழரசுக் கட்சியினால் மாத்திரமே சாத்தியமாகும்.
ஆனால் அதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துவருகின்ற முயற்சி என்ன என்று பார்த்தால் பூச்சியம் என்றுதான் கூறவேண்டி உள்ளது.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணசபைக்கு கிழக்கில் இருந்து களமிறக்கப்படக்கூடிய தலைவர் என்று யாரையும் அடையாளம் காட்டமுடியாத ஒரு வங்குரோத்து நிலையிலேயே தமிழரசுக் கட்சி நின்றுகொண்டிருக்கின்றது.
வடமாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர்கள் என்று பலரை பட்டியலிட்டு வருகின்ற தமிழரசுக்கட்சி, கிழக்கு மாகானத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரைக்கூட இதுவரை அடையாளப்படுத்தவில்லை.
தற்போதைய தமிழரசுக் கட்சி தலைமையின் ஆளுமைக் குறைபாடு காரணமாகவே கிழக்கிற்கான ஒரு முதன்மை வேட்பாளரை அந்தக்கட்சி இதுவரை முன்னிலைப்படுத்தவில்லை என்று தெரிவிக்கின்றார்கள் அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள்.
முன்நிலைப்படுத்தாதது மாத்திரமல்ல கிழக்கில் யாரையும் இதுவரை அந்தக் கட்சி தயார்படுத்தவும் இல்லை. வளர்க்கவும் இல்லை.
கடந்த நாடாளுமன்ற வேட்பாளர் தெரிவின்போது கொழும்பில் இருந்து கிழக்கிற்கு அவசர அவசரமாக சில இறக்குமதிகளைச் செய்து, பிரதேசவதம் பேசும் சக்திகளுக்கு வலுச்சேர்த்ததுபோன்று, இம்முறையும் ஒரு கூத்தை அங்கு அரங்கேற்றி ராஜபக்சேக்கள் கிழக்கை ஆட்கொள்வதற்கான அத்தனை ஒத்தாசைகளையும் தமிழரசுக்கட்சியின் தலைமை வழங்கி முடிப்பார்கள் என்று கூறுகின்றார்கள் அக்கட்சியின் கிழக்கு முக்கியஸ்தர்கள்.
தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா வடமாகான முதன்மை வேட்பாளராக களமிறங்க கொம்புசீவி விடப்பட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய 'விவசாயி' சுமோ அந்தக் காரியத்தை கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கின்றார்.
'நீங்கள்தான் வடமாகாணத்தை ஆழத் தகுதியானவர்' என்று மாவையை உசுப்பேத்திக்கொண்டு இருக்கின்றார்.
மாவையும் 'கைப்பிள்ளை' வடிவேல் பாணியில் ரெடியாகிவிட்டார்.
'விவசாயி' சுமோக்கு இதில் பல லாபங்கள். ஒன்று: 'கப்பில(Gapஇல்) கடா வெட்டுவது' என்று கூறுவார்களே.. மாவை விடயத்தில் அதனையே செய்கிறார் விவசாயி சுமோ.
'நீங்கள்தான் தமிழ் இனத்தின் தானைத் தலைவர்', நீங்கள்தான் யாழ் மக்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர்..'உங்கள் தலைமைப் பதவியைக் காப்பாற்ற நீங்கள் எப்படியாவது வடமாகானசபையின் முதல்வராகி உங்களை நிரூபிக்கவேண்டும்;..' இப்படி மாவையை உசுப்பேற்றிக்கொண்டே, கிடைக்கின்ற இடைவெளியில் தன்னை சிரேஷ;ட உபதலைவராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் 'விவசாயி' சுமோ.
ஒருவேளை மாவை தோல்வியுற்றால், 'மக்கள் ஆதரவு இல்லாத தலைமை' என்று குற்றம் சுமத்தி அந்தப் பதிவியை பெறுவது அவரது கணக்கு.
ஆனால் மாவை ஐயாவுக்கு இந்தப் பின்னம் எதுவுமே தெரியாது. விளங்கவும் மாட்டாது.
செக்கு மாடு போன்று தலையாட்டுவதைத் தவிர வேறு எதுவுமே தெரியாத ஒரு தலைமையை பெற்றிருப்பதுதான் தமிழரசுக் கட்சியின் மிகப் பெரிய சாபக்கேடு.
வடமாகானசபைத் தேர்தலில் தலைமை வேட்பாளராக மாவை ஐயா களமிறங்கி அதிலும் படுதோல்வியைச் சந்தித்து நிரந்தரமாகவே அவர் அரசியலில் இருந்து விலகி ஓடும் அந்தத் தருணத்திற்காக காத்திருக்கும் கழுகுகளாக பலர் இருக்கின்றார்கள் அந்தக் கட்சியில்.
இந்த இழுபறியில் ஒரு விடயம் கச்சிதமாக நடந்து முடிந்துள்ளது.
கிழக்கை முற்றாக மறந்து வடமாகாணசபையில் மாத்திரம் தனது பார்வையை குவிந்துள்ளது தமிழரசுக் கட்சியின் தலைமை.
கிழக்கு கிட்டத்தட்ட முழுமையாகவே மாவையால் கைவிடப்பட்டுவிட்டதாக கிழக்கின் பல தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சாணக்கியன் என்ற தனிமனிதனின் செயற்பாடுகளினால் மாத்திரமே கிழக்கில் தனது உயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றது தமிழரசுக் கட்சி.
வடக்கின் நிலை அதனை விட பரிதாபகரமாக இருக்கின்றது.
வடக்கில் தமிழரசுக் கட்சியின் நிலை குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகிவிட்டுள்ளது.
பெரும்பாண்மையான தமிழ் மக்களின் நம்பிக்கையையும், அபிமானத்தைப் பெற்ற தமிழரசுக் கட்சி இன்று தமிழ் மக்களை நடு ஆற்றில் விட்டுவிடும் ஒரு நிலையை நோக்கி இட்டுச்செல்லப்படுகின்றதோ என்று அச்சப்படுகின்றார்கள் அக் கட்சியின் முக்கியஸ்தர்கள்.
எப்படியெப்படியெல்லாமோ நகர்வெடுத்து வரலாற்றில் பலவிதமான சாதனைகளைப் புரிந்த தமிழரசுக் கட்சி இன்று பலவீனமான, பொருத்தமற்ற தலைமை காரணமாக, தமிழரின் தாயகத்தை, தமிழ் தேசத்தை, தமிழ் தேசியத்தை இழக்கும் ஒரு அவலத்திற்கு வந்துவிட்டுள்ளது.
தகுதியற்ற, பதவியாசை பிடித்த, மக்கள் செல்வாக்கு அற்ற ஒரு தலைமை கட்சியை வழிநடாத்தினால், அந்தக் கட்சி எப்படி சிதறிச் சின்னாபின்னமாகும் என்பதற்கு தமிழரசுக் கட்சி ஒரு சிறந்த உதாரணம்.