படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற 91 பேர் கைது
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த 91 பேரும் சிலாபம் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டை வெளியேறிச் செல்ல இந்த நபர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 07 ஆம் திகதி பிற்பகல் சிலாபத்தில் இருந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கற்படை இடைமறித்துள்ளது.
குறித்த படகில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 01 வயது முதல் 62 வயது வரையிலான 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 ஆண்கள், 05 பெண்கள், 07 குழந்தைகள்மற்றும் 6 ஆட்கடத்தல் காரர்கள் அடங்குகின்றனர்
மேலும், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாரவில விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாரவில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, சிலாபம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 76 பேர் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.