சிறிலங்காவை இராணுவத்திடம் ஒப்படைக்க திட்டம் - ஜனநாயகம் பேசினால் சிறை!!
அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்கிறார் பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' அரச தலைவரது செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara Thero).
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், இது “தனது தனிப்பட்ட நிலைப்பாடு” எனவும் கூறியுள்ளார். இதன்போது மேலும் பதிலளித்த அவர்,
“இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை சாதாரண ஒன்றல்ல. கூட்டுப்பொறுப்புணர்வு மூலமாகவே நாட்டை மீட்டெடுக்க முடியும்.
எனவே எதிர்காலத்தில் நாம் சகலரும் பல தியாகங்களை செய்யவேண்டி வரும். கடன்களை நம்பி இனியும் பயணிக்க முடியாது.
புதிய சிந்தனைகளை உருவாக்கி, மாற்றுச் சிந்தனையில் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.
நாட்டின் இந்த நிலைக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளுமே காரணம். நாட்டை கடனுக்குள்ளும், மக்களை பட்டினிக்குள்ளும் தள்ளியுள்ளனர். இதற்கு அரச தலைவர் காரணமல்ல.
இராணுவ ஆட்சி எனக் கூறிக்கொண்டு ஜனநாயக கதை பேசும் சகலரையும் பிடித்து சிறையில் போட வேண்டும். இல்லை என்றால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது” என்றார்.