இனப்பிரச்சினைக்கு தீர்வு - அரசு எடுத்துள்ள புதிய தீர்மானம்
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு நிறுவுதல் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் நேற்று (26) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாரிய சேதங்கள்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சமன் ரத்னப்பிரிய, "மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது" என்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்,
அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.