கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு!
கத்தாரின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் (LNG processing site) ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் சிக்கிக் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 66 பேர் காயமடைந்துள்ளனர்.
ராஸ் லஃபான் (Ras Laffan) தொழிற்துறை மண்டலத்தில் அமைந்துள்ள பார்சான் (Barzan) உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியத்தால் ராஸ் லஃபானில் இருந்து 70 கிலோமீட்டருக்கும் (43 மைல்) அப்பால் உள்ள மத்திய தோஹா வரை ஜன்னல்கள் அதிர்ந்ததுடன் அப்பகுதி வானம் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறியதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுத் தாக்குதல்
இந்த விபத்து குறித்துக் கருத்து தெரிவித்த கத்தார் எரிசக்தி துறை அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி (Saad Sherida al-Kaabi), இது முழுக்க முழுக்க ஒரு தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட விபத்தேயன்றி நாசவேலையோ அல்லது வெளிநாட்டுத் தாக்குதலோ அல்ல என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், இந்த விபத்தினால் நாட்டின் எரிவாயு ஏற்றுமதி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், உள்ளூர் பயன்பாட்டிற்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும் ஆலையின் செயல்பாடுகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதை இப்போதைக்குக் கணிப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரப் பராமரி
அவசரப் பராமரிப்புப் பணிகளுக்காக 2025 டிசம்பர் முதல் இந்த ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே மீண்டும் இயங்கத் தொடங்கியிருந்ததாக அமைச்சர் விவரித்துள்ளார்.
பலியானவர்கள் விபரம் மற்றும் தூதரக உதவி இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதை அமைச்சர் அல்-காபி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள எக்ஸ் (X) பதிவில் ராஸ் லஃபான் தொழிற்துறை நகரில் நேற்றிரவு நடந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காகக் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |