சிக்கினார் ராஜித சேனாரத்ன: நீதிமன்றில் வெளியான அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை(Rajitha Senaratne) லஞ்ச குற்றச்சாட்டில் சந்தேக நபராகப் பெயரிடத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து முற்படுத்துவதாக இன்று (27) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான உபாலி லியனகேவை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது ஆணைக்குழு அதிகாரிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
சட்டப்பூர்வமாக கூட்டுத்தாபனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மணல் அகழ்வுத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்படைத்ததற்காக சந்தேக நபரான உபாலி லியனகே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான், சந்தேக நபரான உபாலி லியனகேவை தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று பிணைப் பத்திரங்களில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், விசாரணையின் முன்னேற்றத்தை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
