சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்த சிறிலங்காப் பிரதமர்
பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து சிறிலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அலரி மாளிகையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளாதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவும் பிரதமருடன் இணைந்து விளக்கேற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.
இன்று முற்பகல் 9.25 மணிமுதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து விளக்கேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
சுனாமி அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் “தேசிய பாதுகாப்பு தினம்” இன்றைய தினத்தில் அனுட்டிக்கப்படுகிறது.
பதினான்கு மாவட்டங்களை பாதித்து சுனாமி அனர்த்தத்தில் 31,229 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4100 பேர் காணாமல் போயினர். இவ்வனர்த்தத்தில் 516,150 பேர் இடம்பெயர்ந்ததுடன், சுமார் 250,000 பேரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிந்தன.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர், பிரதமரின் பாரியார் மற்றும் இராணுவத்தினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.