ரணிலின் கட்சியில் இணையவுள்ள மகிந்த தரப்பின் உறுப்பினர்கள்..!
சிறிலங்கா பொதுஜன பெரமுன உட்பட சில கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணத்தாலும் அவர்களது கட்சி மீதான முரண்பாடுகளினாலும் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளார்கள் எனத் தெரியவந்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த காலங்களில் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பலர் உள்ளடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.