அமைச்சரவை தீர்மானத்தை விமர்சித்து கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திய சாகர!!
சாகர காரியவசத்தின் செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் காணப்படுகிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை விமர்சனத்திற்குள்ளாக்கி பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார் எனவும் கெடுமையாக சாடியுள்ளார்.
இவ்விடயம் குறித்து கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வாழ்க்கை செலவு தொடர்பான குழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளமை பொருத்தமற்றது. இத்தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு தீர்வு காணாத நிலையில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிப்பது பொருத்தமற்றதாகும். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கை கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை விமர்சனத்திற்குள்ளாக்கி தேவையில்லாத நெருக்கடிகளை அவர் தோற்றுவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் கூட்டணியின் தலைவர்கள் எடுத்த தீர்மானத்தை கொண்டு இவர் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தல் முறைமை குறித்தும் ஆளும் தரப்பின் கூட்டணிக்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்தோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதம் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதான 11 பங்காளி கட்சி தலைவர்கள் கலந்துக் கொள்ளவில்லை. பிரதமர் தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு அக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட உறுப்பினர்கள் என 50ற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள். இவ்வாறான சம்பவம் இரு முறை இடம்பெற்றது. பிரதமருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டது.
மாகாண சபை தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் , பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் எனறு பிரதமரிடம் குறிப்பிட்டோம். பங்காளி கட்சி தலைவர்களுடன் பிரதமர் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டோம். புதுவருட கொவிட் கொத்தணி காரணமாக பிரதமருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.