யாழ். வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இன்று (18) அதிகாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இளைஞன் ஒருவர் பலர் மீது வாள் வெட்டு மேற்கொண்டு இதுவரை பலரை படுகாயப்படுத்திவந்த நிலையில் பல தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணி காவல்துறையினர்
அண்மையில் பிணையில் சென்றிருந்த குறித்த இளைஞன் பல வீடுகளை தாக்கியும், பொருட்களை சேதப்படுத்தியும் வந்துள்ளதுடன் பலரை அச்சுறுத்தியும் வந்துள்ளதாகவும் ஒரு சில தினங்களுக்கு முன் வீதியால் சென்றுகொண்டிருந்த ஒருவரை சரமாரியாக வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சில நாட்களாக மருதங்கேணி காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு முயன்றும் கைது செய்ய முடியாததனால் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் மருதங்கேணி காவல்துறையினர் இணைந்து குறித்த சந்தேக நபரை கைது செய்யச்சென்றுள்ளனர்.
இராணுவம் மற்றும் காவல்துறையினர் சுற்றிவளைப்பு செய்யவுள்ளதை அறிந்துகொண்ட குறித்த சந்தேக நபர் தப்பித்துக் கொண்டதாகவும் மருதங்கேணி காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணை வழங்கிய நீதிமன்றம்
இதேவேளை குறித்த சந்தேக நபர் வாளுடன் தொடர்சியாக உலாவித்திரிவதாகவும், இதனால் பாடசாலைக்கும் கல்வி நிலையங்களுக்கும் மாணவர்கள் செல்வதற்கு அச்சப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த சந்தேகநபருக்கு பயந்து ஆறு குடும்பங்கள் மாளிகைத்திடல் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வாள் வெட்டு சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் குறுகிய காலத்தில் பிணை வழங்குவதால் குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக இவ்வாறு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
