வடமாகாண காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் காவல்துறை ஊடகப்பேச்சாளருக்கும் இடையில் கலந்துரையாடல்
வடமாகாண காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுடன் காவல்துறை ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது என்பது தொடர்பில் காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவேயினால் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் காவல்துறை அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? அதே நேரம், காவல்துறை அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி? என்ற முறையில் செயற்பட வேண்டும் என்பன பற்றி காவல்துறை ஊடகப்பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை
வெவ்வேறு தரப்புக்கள் இருக்கின்றதனால், அத்தரப்புக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் இரு தரப்பினருக்கும் இடையே பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் தெரிவித்தமைக்கு அமைவாக யாழ்ப்பாணம், காங்கேசன்துறை முல்லைத்தீவு, மன்னார், போன்ற பகுதிகளில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களை உங்கள் கடமையின் போது நீங்கள் பயன்படுத்த வேண்டும். போராட்டங்களை தடுக்கும் போது, முரண்பாடான நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில், அவ்வாறான நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்கள் சமூக சேவை செய்கின்றார்கள். காவல்துறையினரும் 24 மணி நேரம் கடமையில் இருப்பதனால் இரு தரப்பினருடைய சேவைகளும் சமூகத்திற்கு அவசியமானது.
சமூகத்துடன் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டால் சமூகத்திற்கு உதவியாக இருக்கும். அதேநேரம், காவல்துறையினரின் கௌரவத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்.
இந்த விடயங்களை உணர்ந்து செயற்படும் போது அந்தந்தத் தரப்பினர்களிடையை பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
