ஆளுந்தரப்பினரின் சொத்து விபரங்கள் : விசாரணையை வலியுறுத்தும் முன்னாள் அமைச்சர்
ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
சட்டம் நடைமுறைப்படுத்தப்படல்
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். விசாரணைகளில் எவரேனும் தவறிழைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் தாம் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்ததாக ஜே.வி.பி.யினர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் தற்போது அவர்கள் கூறியதை விட முற்றிலும் மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது.
இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதன் ஊடாக அவர்கள் தமது ஆதரவாளர்களையும், கட்சி அங்கத்தவர்களையும் ஏமாற்றியிருப்பார்களாயின் அதனை அனுமதிக்க முடியாது. எனவே இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமாக இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம்.
சிறப்புரிமைகள் நீக்கப்பட்டமை
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் நீக்கப்பட்டமை தொடர்பில் மீண்டும் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
அவ்வாறிருக்கையில் அவரது ஓய்வின் பின்னர் அவருக்கு பாதாள உலகக் குழுக்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவரது பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
அரச தலைவர்களுக்கு பாதுகாப்பு என்பது அத்தியாவசியமானதாகும். எவ்வாறிருப்பினும் அநாவசிய செலவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். எனவே அவற்றை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவற்றுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
முன்னாள் அமைச்சர்கள் குடியிருந்த வீடுகள் இன்று மூடப்பட்டுள்ளன. 100 ஆண்டுகள் பழமையான அந்த வீடுகள் சேதமாகிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் இவை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
