யாழில் மந்திரிமனை உடைந்து விழுந்தமைக்கு காரணமான நபர் - சாடும் தொல்லியல் திணைக்களம்
சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மந்திரிமனையை புனரமைக்க தாம் முயற்சித்த போதிலும் அதற்கு தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்தமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய உதவி பணிப்பாளர் பந்துல ஜீவவை விளக்கமளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணி தனி நபருக்கு உரியது
மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரிமனை, பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மந்திரிமனையை பாதுகாக்கவும் அதனை புனரமைக்கவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவை எதையும் செய்ய முடியவில்லை.
மந்திரி மனை அமைந்துள்ள காணியானது தனி நபருக்கு உரியது. அவருக்கு சொந்தமாக மந்திரிமனை காணப்படுகிறது. அதனால் அவரின் அனுமதியின்றி தொல்லியல் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.
மந்திரிமனையை புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பதற்காக 2011ஆம் ஆண்டு முதல்இ வடமாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், தொல்லியல் பணிப்பாளர்கள் என மாறி மாறி வந்த அத்தனை பேரும் காணி உரிமையாளருடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்த போதிலும் அவர் எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை.
திருடர்களை கைது செய்யவில்லை
மந்திரிமனையை புனரமைக்க பல்வேறு தன்னார்வ கொடையாளிகள், உலக வங்கி என பல்வேறுபட்ட தரப்பினரும் நிதியுதவிகளை வழங்க முன் வந்தார்கள். ஒரு கொடையாளி 50 லட்சம் ரூபா வழங்கியும் இருந்தார்.
அவர் நிதி வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் காணி உரிமையாளர் சம்மதம் இல்லாமையால் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது போனமையால் அந்த கொடையாளி தனது பணத்தினையும் மீள பெற்றுக்கொண்டார்.
இவ்வாறான நிலையில் மந்திரிமனை பல்வேறு சேதங்களை அடைந்திருப்பதால், அது இடிந்து விழாமல் இருக்கும் வகையில் எமது தற்துணிவு அடிப்படையில், இடிந்து விழ கூடிய நிலைமையில் காணப்பட்ட பகுதிகளுக்கு 19 இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றை பாதுகாத்தோம்.
அந்த கம்பிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.
காவல்துறையினர் அதனை ஒரு முறைப்பாடாக மாத்திரமே ஏற்றுக்கொண்டார்கள் தவிர விசாரணைகளை முன்னெடுத்து திருடர்களை கைது செய்யவில்லை.
அடுத்த கட்ட நடவடிக்கை
இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினம் (நேற்று) பெய்த மழை காரணமாக ஏற்கனவே இடிந்து விழ கூடும் என எதிர்பார்த்த இரும்பு கம்பிகள் பொருத்தி இருந்த பகுதி இரும்பு கம்பிகள் திருடப்பட்டமையால் இடிந்து விழுந்துள்ளது.
தொல்லியல் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மந்திரிமனை தனியார் ஒருவரின் சொத்தாக காணப்படுவதால் இதுவரை காலமும் குறித்த தனியாருடன் தொல்லியல் திணைக்களம் கலந்துரையாடல்களை நடத்தி வந்தது.
அவை எதற்கும் அவர் தனது சம்மதத்தை தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.
அதனால் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
