ஓமானில் சிக்கிய 6.6 மில்லியன் டொலர் சைபர் குற்றப் பணம்! இலங்கை தொடர்பில் வலுத்துள்ள கேள்வி
சர்வதேச இணையவழிக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச காவல்துறை மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிதியை ஓமான் நாட்டிலுள்ள ஒரு வங்கியின் மூலம் உள்ளூர் நாணயமாக மாற்ற முயன்ற சிலரை அதிகாரிகள் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்டர்போலின் ஒத்துழைப்புடன் ரோயல் ஓமன் காவல்துறை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க டொலர் மோசடி
எனினும், இணைய மோசடி மூலம் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பணம் எந்த ஆசிய நாட்டைச் சேர்ந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், இலங்கையில் அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரும், அஞ்சல் திணைக்களத்திலிருந்து 625,000 அமெரிக்க டொலரும் மோசடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால், ஓமானில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியில் இலங்கையில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணமும் அடங்கியிருக்குமா என்ற சந்தேகம் மற்றும் கவனம் தற்போது அதிகரித்துள்ளது.
ஆனால், இலங்கையைத் தவிர அண்மைக் காலத்தில் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இதுபோன்ற பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |