ஊழல் குற்றச்சாட்டில் உப காவல்துறை பரிசோதகர் அதிரடி கைது
கிண்ணியா காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிண்ணியா காவல்துறை நிலையத்தினுள் வைத்து நேற்று (31) மாலை 5.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10,000 ரூபாய் கோரல்
முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (31) மாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |