யோசித ராஜபக்ச மீதான வழக்கு...! முக்கிய சாட்சியமாக முன்னாள் காதலி முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையில் அவரின் முன்னாள் காதலியான யசரா அபேயநாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நேற்று (09.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போதே அவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் மேலதிக சாட்சியமளித்தல் ஜுலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலும் 13 சாட்சிகளை மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டு அழைப்பாணையும் விடுத்துள்ளார்.
அரசுத் தரப்பு
அரசுத் தரப்பு சார்பில் பிரதி காவல்துறை மா அதிபர் ஜனக பண்டார மற்றும் அரச சட்ட ஆலோசகர் உஸ்வால்ட் லட்சுமண பெரேரா ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.

பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சம்பத் மெண்டிஸ் உள்ளிட்ட சட்ட ஆலோசகர்கள் குழு முன்னிலையானது.
73 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்டு ஐந்து காணிகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி யோசித ராஜபக்ச மீது சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |