மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் - யாழில் சந்தேக நபர் கைது
மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (3.2.2025) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம்
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்தது.
இந்நிலையில், விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண காவல்துறை புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |