தியாகி பொன் சிவகுமரன் நினைவு நாளை முன்னிட்டு 11 நூல்கள் வெளியீடு
தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தியாகி பொன் சிவகுமரனின் 52-ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, "மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகள்" என்ற கருப்பொருளில் 11 நூல்கள் அறிமுக விழா, சனிக்கிழமை (27.06.2026) மாலை 5.00 மணியளவில் கரூர் ஐயப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி) தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் நிவேதா சத்யாராஜ், இரா. ஆதிமொழி (வி.சி.க. மாநில கருத்தியல் பரப்புரை துணைச் செயலாளர்), பேராசிரியரும் ஆய்வாளருமான முனைவர் சாலினி, முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் முனைவர் ப. கிருட்டிணவேணி ஆகியோர் நூல்களின் உள்ளடக்கம் மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்து கருத்துரையாற்றினர்.
புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களுக்கு மதிப்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "கஸ்தூரியின் ஆக்கங்கள்", "வானதியின் கவிதைகள்", "காதோடு சொல்லிவிடு", "தமிழீழ தியாகச்சுடர் அன்னை பூபதி", "கனவுக்கு வெளியேயான உலகு", "தமிழீழ பெண்களின் சிறுகதைகள் – வழி", "வேர்கள் துளிர்க்கும்", "பெண்களும் புரட்சியும்", "மார்ச் 8 அனைத்துலகப் பெண்கள் நாள்", "கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி", "அறிவரண் தளபதி பொட்டு அம்மான் தளபதியின் வாழ்க்கை வரலாறு" உள்ளிட்ட 11 நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அருண் தங்கவேல் (மருத்துவர்), ஜெகநாதன் (வழக்குரைஞர்), ஜீவா சங்கிலி, அக்பர் (தொழிலதிபர்), செங்குட்டுவன் (இயற்கை வேளாண்மையாளர்), விஜயன் (சமூக செயற்பாட்டாளர்), பழ. ஆனந்த் (வழக்கறிஞர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), மலைக்கொழுந்து (ஆசிரியர்), மில்லர் மெய்யழகன், காமராஜ் உள்ளிட்டோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
சிறப்புரையாற்றிய கொளத்தூர் மணி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு, சமூக கட்டமைப்புகள், கல்வி, நீதித்துறை, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், வரலாற்றை அறிந்து சமூக உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய நூல்களும் நிகழ்வுகளும் பயன்பட வேண்டும் என்றார். நிகழ்வில் அன்பு எழிலன் (புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர்), வேல் அழகன், எத்திராஜ், ராமகிருஷ்ணன், மோகன்தாஸ் (கரூர் மாவட்டத் தலைவர்), இரா. காமராசு (மாவட்டச் செயலாளர்), டேவிட், கிருஷ்ணன் (ஈரோடு மாவட்ட துணைத் தலைவர்), பிரபு (ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), நாகராஜ் (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), ரஞ்சித், ஆசிரியர் சதீஸ்குமார், கார்த்தி உள்ளிட்ட கழக மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.






சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்