ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த போதிலும், அவருடன் விவாதத்தில் ஈடுபட தமக்கு விருப்பமில்லை என்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV தெரிவித்துள்ளார்.
தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாகச் செய்தியாளர்களிடம் பேசிய போப் லியோ, ட்ரம்ப்பின் காட்டமான விமர்சனங்களுக்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போர் எனும் பைத்தியக்காரத்தனம்
"நான் ஒரு அரசியல்வாதி அல்ல. அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் எனது ஒரே செய்தி; அது மாறப்போவதும் இல்லை. போரை நியாயப்படுத்த மத ரீதியான மொழியைப் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

Image Credit: ACI Africa
இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் எனும் பைத்தியக்காரத்தனத்தை சர்வதேச சமூகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் விமர்சனம்
கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் அமெரிக்க - ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, போப் லியோ விடுத்த அமைதி அழைப்பு அதிபர் ட்ரம்ப்பை அதிருப்திக்குள்ளாக்கியது.

அதனை தொடர்ந்து, போப்பின் மேற்படி நிலைப்பாடு தொடர்பில் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |