தென்மராட்சி சமுக சேவகருக்கு லண்டனில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை
தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் ஒய்வுநிலை உதவிப்பதிவாளரும் ,சாவகச்சேரி நகர சபை 6ம் வட்டார உறுப்பினருமான யோகேஸ்வரன் ஜெயக்குமார் அவர்களின் நினைவாக நேற்றைய தினம் (04.03.2023) லண்டனில் Northolt பிரதேசத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது.
இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ,பொருளாளர்,போசகர் பதவிகளையும் ,தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தில் 20 வருடங்களிற்கு மேலாக செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளையும் ,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன் புரிச்சங்கத்தில் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளையும்.சாவகச்சேரி சப்பச்சிமாவடி விநாயகர் ஆலய தர்மகத்தா சபை உப தலைவர்,அரசடி சன சனசமுக நிலைய தலைவர்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி அமைப்பாளர் ஆகிய பல முக்கிய பதவிகளை வகித்தும் தென்மராட்சி மண்ணின் சிறந்த ஒரு சமுக சேவகருமாக திகழ்ந்தவர் ஆவார்.
ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் பெருந்தொகையாக மக்கள்
மக்களிற்கு பல தொண்டாற்றிய அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் பெருந்தொகையாக மக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.
இதில் தென்மராட்சியின் நலனில் அக்கறை கொண்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் பிரித்தானியக் கிளையின் தலைவர் கா.சங்கரசீலன் ,உபதலைவர் க.பாலகிருஸ்ணன் மற்றும் பல உறுப்பினர்களும் உரையாற்றினர்.
ஜெயக்குமார் வெற்றிக்கேடயம்
நிகழ்வில் கலந்து சிறப்பித்த தென்மராட்சி அபிவிருத்தி கழக பிரித்தானிய கிளையின் தலைவர் Dr ஆறுமுகம் புவிநாதன் உரையாற்றுகையில், தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தில் அன்னாரின் அர்ப்பணித்த செயற்பாட்டிற்காக இனிவருங்காலங்களில் நடைபெறவிருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் நடாத்தப்படும்,தென்மராட்சி கழகங்களிற்கிடையிலான மென்பந்து போட்டியில் ஜெயக்குமார் வெற்றிக்கேடயம் என்ற ஒன்றினை வழங்க இருப்பதாக கூறியிருந்தார்.
அவரைத்தொடர்ந்து நண்பர்களும் உறவினர்களும் அஞ்சலி உரையை வழங்கினர். இறுதியில் மதிய போசனத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.





