நாடாளுமன்றம் கலைப்பு: டிசம்பரில் பொதுத் தேர்தல் - வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இலாகாக்களை வைத்திருப்பார், அதே நேரத்தில் பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அவர் நிர்ணயிப்பார் என்றும் NPP தகவல்கள் தெரிவித்தன.
இந்த திகதிக்குப் பிறகு, வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 முதல் 17 நாட்கள் கால அவகாசம் வழங்கும்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றுக் காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி திசாநாயக்க, முப்படைத் தளபதிகளையும் அதன் பின்னர் தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இன்று இரவு அவர் நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தல்
அதற்கமைய, தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேற்படி அமைச்சரவை அமைச்சர்களின் பணிகள் தொடரும்.
எனினும், அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறும் என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |