அரசதலைவர் கல்வித் துறையில் தலையிட்டால் இலவச கல்வி அழியும்
அரசதலைவர் கல்வித் துறையில் தலையிட்டு கல்வித் துறையையும் அழிக்க போகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசதலைவர் கையாண்ட அனைத்தும் அழிந்து போயுள்ளன. சுகாதாரம், கமத்தொழில் அழிந்துள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி கல்வித் துறையில் தலையிட்டுள்ளார்.
இலவச கல்வி என்பது நாட்டின் பிள்ளைகளுக்காக இருப்பது. தற்போது அதற்கும் அரசதலைவர் செயலணிக்குழுவை நியமித்துள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் அரசதலைவர் ஆற்றிய உரையின் மூலம் கல்வித் துறைக்கு பொறுப்பாக இராணுவ தளபதியை நியமிக்க போகிறார் என்பதையே எம்மால் உணர முடிந்தது.
அரசதலைவரின் தனது பதவிக்காலத்திற்குள் நாட்டின் இரண்டு துறைகளை அழிவின் விளிம்பை நோக்கி தள்ளியுள்ளார். சுகாதாரம் மற்றும் கமத்தொழில் துறைகளுக்கு ஏற்படுத்திய நிலைமையை கல்வித் துறையிலும் ஏற்படுத்தி விட வேண்டாம் என நாங்கள் அரசதலைவருக்கு தெரிவிக்கின்றோம்.
அரசதலைவர் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து, நாட்டில் மீதமாக இருக்கும் இலவச கல்வியையும் அழிக்க போகிறார். இதுதான் எமக்குள்ள பிரச்சினை. என தெரிவித்துள்ளார்.