ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பதை முன்னாள் அரசதலைவர் விரும்பவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அப்படி தாக்குதல் நடக்க போகிறது என்ற தகவல் தனக்கு கிடைக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardana) தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக சட்டமா அதிபர் விசேட மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் இன்று நீதிபதி ஆதித்திய பட்டபெந்தியின் கேள்விக்கு பதிலளித்துள்ள ருவான் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் நடத்தப்பட்ட பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு என்னையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அழைக்கவில்லை.
இது சம்பந்தமாக அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோவிடம் விசாரித்த போது எம்மை அழைப்பதை முன்னாள் அரசதலைவர் விரும்பவில்லை என தெரிவித்தார். அந்த காலத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பதவியில் பணியாற்றவும் இடமளிக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் அப்படி தாக்குதல் நடக்க போகிறது என்ற தகவல் எனக்கு கிடைக்கவில்லை. புலனாய்வு அதிகாரிகள் எனக்கு தகவல்களை வழங்கியதில்லை எனவும் இந்த தாக்குதல் நடக்கும் வரை அப்படியான தாக்குதல் பற்றிய தகவல் எனக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கும் போது நாட்டின்அரசதலைவராக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தார்.
அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கவில்லை. இதனால் இராணுவத்தினரை அழைக்கும் கட்டளை வழங்கும் அதிகாரம் பாதுகாப்புச் செயலாளருக்கு இருக்கவில்லை அரசதலைவருக்கே இருந்தது என தெரிவித்துள்ளார்.