சர்வதேசத்திற்கு பொய் - சிறிலங்கா அரசாங்கத்தின் கபடம் அம்பலத்திற்கு..!
அரசாங்கம் என்ன கூறினாலும் அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர அரசாங்கம் தயாராகிறது.
அதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் பல சரத்துகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்காலிக இடைநிறுத்தம்
சட்டமூலத்தை வாபஸ் பெற்றதாக சர்வதேசத்திடம் கூறினாலும் இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம் என்றும் மக்களை வாழ வைப்பதற்கு பதிலாக மக்களை அடக்க மாத்திரமே தெரிந்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கு பயந்து தேர்தலை நிறுத்துவதற்காக இந்த அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு, மக்களின் சர்வஜன வாக்குரிமையை இல்லாதொழிக்க செயற்படுகிறது.
அரச மிலேச்சதனம்
மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவதை தடுப்பதற்கும் எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கும் பல சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் முனைகிறது.
இது அரச மிலேச்சதனத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
