சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் சம்பளம் பாதியாக குறைப்பு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் (Thushara Upuldeniya) இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைக் குறிப்பிட்டார்.
வெசாக் தினத்தன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவிப்பதற்கு உதவியதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகளுக்காக துஷார உபுல்தெனியவை கடந்த திங்கட்கிழமை (09) குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.
அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
அத்துடன், ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்தவும் அமைச்சரவை முடிவு செய்தது.
இந்தநிலையில் அவரது சம்பளத்தில் பாதியை வழங்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்க, தனது வழக்கமான பதவியின் கடமைகளுக்கு மேலதிகமாக பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
