ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் முன்னேற்றம்! அமெரிக்கா - கட்டார் சுட்டிக்காட்டு
அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதற்குமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் குறைந்தது.
எனினும், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதுடன், ஓமான் கடற்கரைக்கு அண்மையில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் காணப்படாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து மோதலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும், ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கவும் கட்டார், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கச்சா எண்ணெய் போக்குவரத்து
உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், இப்பகுதியின் நிலைமை உலக பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் வரைவு முன்மொழிவுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், இராஜதந்திர முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேச்சுவார்த்தையின் மையமாக ஓமான் மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக கப்பல் போக்குவரத்து ஏற்பாடு காணப்படுவதாகவும், ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதே தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் பிராந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |