மன்னாரில் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மக்கள் கடும் விசனம்
மன்னார் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையம் ஒன்றினால் அப்பகுதியில் பாரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் இன்று (19.04.2026) மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள், "நீண்டகாலமாகவே இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வருகின்றனர்.
கடும் துர்நாற்றம்
இங்குள்ள இராணுவ முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தச் செயற்பாடுகள் அமைவதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிலர் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மன்னார் காவல்துறையினர் மற்றும் நகரசபை ஆகியவற்றுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த மனிதநேயமற்ற மற்றும் சட்டவிரோதச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.
இதனை தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்து, அதனை உடனடியாக அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் ” எனப் பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |