சர்வதேச சட்டத்தின் கீழ் சிறிலங்காவுக்கு சிக்கல்!! தொடரும் இறுக்கம்
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட, பல நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தடைவிதிக்கும் நடவடிக்கையை பிரித்தானியா தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யக்கூடாது என பிரித்தானிய தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான, கட்டளையை வழங்கும் அதிகாரத்திலிருந்த சிறிலங்கா இராணுவ ஜெனரல்களுக்கு உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென பிரித்தானிய தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புகள் அண்மையில் கூட்டாக வலியுறுத்தியிருந்தன.
இதனை கோடிட்டுக் காட்டியிருக்கும் பிரித்தானிய தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பர், இவ்வாறான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைவிதிக்க ஏன் காலதாமதம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் பரந்தளவிலான மற்றும் செல்வாக்குமிக்க தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டுமெனில், சர்வதேச மக்னிஸ்கி சட்டத்தின்கீழ் சிறிலங்கா தொடர்பில் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.