இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற வாய்ப்பு
இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அமர்வில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் வாக்குகளை பெற முயற்சிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பல நாடுகளின் ஆதரவு கிடைக்கும்
அமெரிக்கா, பிரித்தானியா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைபுக்கு பல நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சர்வதேச அதிகார வரம்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட மற்றும் பிற வழிகாட்டுதல்களை வழங்குவது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி குற்றம் செய்ததற்கான தெளிவான சாட்சியங்களைக் கொண்ட நபர்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்து வரைவுத் தீர்மானம் கவனம் செலுத்துகிறது.
தீர்மான வரைபில் உள்ள பரிந்துரை
இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைவதற்கு காரணமான பொருளாதாரக் குற்றங்களைச் செய்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த வரைவுத் தீர்மானங்கள் பரிந்துரைக்கின்றன என்று கூறப்படுகிறது.