மக்களை பாதிக்கும் மதுபானசாலை - வீதிக்கு இறங்கி போராடிய மக்கள் (படங்கள்)
மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்கவேண்டாம் என கோரிக்கை விடுத்து மக்கள் இன்றைய தினம் (04) மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது பிரஜைகள் குழு, மகளிர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன இணைந்து மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த போராட்டம் நகரப் பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது.
மன்னாரில் கத்தோலிக்க, இந்து ஆலயங்கள், பாடாசாலைகள் மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
விபத்துக்கள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு.

குறித்த பகுதிக்கு அருகாமையில் வைத்தியசாலை, பிரதான வீதி, தனியார் கல்வி நிறுவனங்கள், மாற்று திறனாளிகள் பாடசாலைகள் என பல தரப்பட்ட பொது நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் இவ்வாறான மதுபான சாலைக்கு அனுமதி வழங்குவதினால் அப்பகுதியில் விபத்துக்கள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்து குறித்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
''அனுமதி வழங்கும் அதிகாரிகளே மக்களின் அழிவுக்கு துணைபோகாதே'', ''மதுபானசாலை அமைப்பதற்கான அரச சட்டத்தை அமுல்படுத்து'', ''பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மதுபானசாலைகள் வேண்டாம்'', புனித பாதையில் வன்முறை ஏற்பட வழி வகுக்காதே'' போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகஜர் கையளிப்பு

இதேவேளை போராட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், இந்து ஆலய குருக்கள், சட்டத்தரணிகள், நகரசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் மதுபானசாலை அமைக்கும் திட்டத்தை நிறுத்தக் கோரியும், மன்னார் நகரப் பகுதியில் மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதற்கான மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்