நல்லூர் பிரதேச சபையின் அசமந்தம் : யாழில் வெடித்த போராட்டம்
யாழ். இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (09) முற்பகல் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்“ என்ற தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்களுக்கு அசௌகரியம்
இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், “கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தல்
இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


