தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டி பகுதியில் இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி (TNPF) அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் கட்டப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரையும் 10 ஆம் திகதி (வியாழக்கிழமை) பௌர்ணமி தினத்தன்று காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமாக நடைபெறவுள்ளது.
காணி விடுவிப்பு கோரி
தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்தில் காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் இணைந்து பங்கேற்கவுள்ள நிலையில் அனைத்து சமூகப் பிரதிநிதிகளும், குடிமக்களும் திரளாக பங்கேற்குமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
