ஆறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்: பொதுமக்களுக்க அழைப்பு
தமிழ் மக்களுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டனப் பேரணியும் உண்ணாவிரதப் போராட்டமும் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபியினால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
இன்று (11.09.2026) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
செம்மணி புதைகுழி விவகாரம்
அபகரிக்கப்பட்ட காணிகளை மீள விடுவித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குதல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்துதல், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் கட்சி பேதமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜெயகோபி அழைப்பு விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |