மூதூர் மத்திய கல்லூரிக்கு முன்னால் வெடித்த போராட்டம்
திருகோணமலை (Trincomalee) - மூதூர் மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று (16) இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் நிலவும் கட்டிடத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துதருமாறும், புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
வாசகங்களை ஏந்தியவாறு போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டோர் நாங்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள், இடைநிறுத்தப்பட்ட கட்டிடத்தை மீளத்தாருங்கள், அரசே இடைநிறுத்தப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை உடனடியாக ஆரம்பி, அனர்த்தம் வரும் வரை காத்திராமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் மத்திய கல்லூரியில் காணப்படும் ஒரு கட்டிடம் கடந்த வாரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக 14 வகுப்பு மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னைய அரசாங்கத்தால் மூதூர் மத்திய கல்லூரி புதிய கட்டிடத்திற்காக 120 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கத்தால் இவ் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு இவ் அரசாங்கம் புதிய கட்டிடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
மகஜர் கையளிப்பு
கவனயீர்ப்பு நிறைவடைந்த பின்னர் அவ்விடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு கட்டிட நிலமைகளையும் பார்வையிட்டார்.
மூதூர் வலயக் கல்வி அலுவலக தொழில்நுட்ப அதிகாரிகளும் இவர்களோடு பிரசன்னமாகியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களோடு பேசுவேன் என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
