மாகாண நிர்வாகச் செயற்பாடுகளில் இணைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு!
உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்கபடுவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளையும் மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்துரையாடி, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் நேற்று (17) பிற்பகல் அதிபர் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநருடன் இணைந்து

நாடாளுமன்றம் அடுத்த வருட இறுதி வரை செயற்படும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை நிர்வாக செயற்பாடுகளில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநருடன் இணைந்து செயற்பட விசேட ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அதிபர் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமல்லாமல் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, கல்வி, தொழில்பயிற்சி மற்றும் அந்தந்த மாகாணங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுதல் ஆகிய பணிகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர் கூறினார்.
ஆசிரியர் வெற்றிடங்களை

இவை தவிரவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மாகாண மட்டத்தில் சுற்றுலா சபைகளை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் போது மாகாண சபைக்குட்பட்ட எல்லையில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியம் இந்த வேளையில் கலந்துரையாடப்பட்டது என்று அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.