மாகாண சபை தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு
நிலுவையிலுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
அத்துடன் மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது என அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஒதுக்கீடுகள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல்வாதிகள் அல்லது பல்வேறு தனிநபர்கள் வெளியிடும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. வெவ்வேறு நபர்கள் கூறும் அறிக்கைகள் எங்களுக்கு முக்கியமல்ல. தற்போதைய சட்ட ரீதியான நிலைமைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுவோம்.
நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சட்டப் பின்னணிகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நாடாளுமன்றத்தினால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது, தேர்தல் நடத்தப்படும் வேளையில் அதற்கான நிதியைத் திறைசேரி விடுவிக்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |