நீடிக்கும் போர் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் புடின்!
ரஷ்யாவின் ஆயுதப்படையில் மேலும் பலரை சேர்க்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்காவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆயுதப்படையில் சேரும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
புதிய சட்டம்
இந்த நடவடிக்கை உக்ரைனில் நடக்கும் போருக்காக மேலும் சிவிலியன் நிபுணர்களை நியமிக்க ரஷ்யாவிற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் ரஷ்யாவின் நாடாளுமன்றம் இராணுவத்தில் சேரும் நபர்களுக்கான உயர் வயது வரம்பை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது.
அதிகளவான மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்கள் உட்பட அதிக தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக ரஷ்யா இந்த சட்டத்தை முன்வைக்கிறது.
உக்ரேனிய மற்றும் மேற்கத்திய இராணுவ நிபுணர்களின் கூற்றுப்படி, போரில் ரஷ்யா சுமார் 30,000 வீரர்களின் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த அதிகாரபூர்வ ரஷ்ய அறிக்கைகள் மார்ச் 25 அன்று மொத்தம் 1,351 பேர் இறந்ததாகக் கூறியது, அதன் பிறகு அந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை.
அதிபர் புடின் உக்ரைனில் போருக்காக பெரிய அளவிலான ஆட்சேர்ப்பைத் தவிர்த்தார், இருப்பினும், கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிலர் மோதலில் ஈடுபட்டதாக மார்ச் மாதம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டது, மேலும் சிலர் உக்ரேனியப் படைகளால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அதிகாரபூர்வ கொள்கையல்ல
எவ்வாறாயினும், பொதுமக்களை இராணுவத்தில் சேர்த்து அவர்களை போருக்கு அனுப்புவது நாட்டின் அதிகாரபூர்வ கொள்கையல்ல என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனில் போர் தொடருவதற்கான அறிகுறியாக "இலக்குகள்" அடையப்படும் வரை அதன் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" தொடரும் என்று கூறியுள்ளது.
ரஷ்ய இராணுவம் முன்னதாக நிர்ணயித்த தேசிய மற்றும் வெளிநாட்டு இராணுவ ஆட்சேர்ப்புகளுக்கான வயது வரம்பு என்பது, ரஷ்யர்களுக்கான வரம்பு 18-40 ஆண்டுகள் மற்றும் வெளிநாட்டினருக்கான வரம்பு 18-30 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.