செயல் இழக்கும் நிலையில் ராகம வைத்தியசாலை - மருத்துவமனை தாழ்வாரங்களில் குவிந்துள்ள சடலங்கள்
ராகமை வைத்தியசாலை செயல் இழக்கும் நிலையை எட்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் லியனகே ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வைத்தியசாலையில் 500 கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவர்களில் பலர் மெத்தைகளுடன் வைத்தியசாலை தாழ்வாரங்களில் காணப்படுகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றாமல் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் வைத்திருக்கின்றனர் என சில நோயாளிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ராகம மருத்துவமனையின் கழிவறைகள் வசதிகள் மோசமானவையாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களது மருத்துவமனையே ஒரேயொரு போதனா வைத்தியசாலை கடந்த ஒரு வருடமாக இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்கள் நான்கு விடுதிகளை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். எங்கள் மருத்துவமனையின் 26 முதல் 30ம் விடுதிகளை நாங்கள் நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளோம். நாங்கள் இவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்கள் அனைவரையும் துரித அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம்இதன் பின்னர் சிறிதளவு அறிகுறிகளை வெளிப்படுத்தியவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடும் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களை கந்தானை மினுவாங்கொட பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கின்றோம் ஏனையவர்களை ஏழாம் விடுதியில் அனுமதித்து கட்டில்களின் அடிப்படையில் அவர்களை அங்கு அனுப்பிவைக்கின்றோம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விடுதிகள் 26 முதல் 30 வரையான செயற்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பியவேளை, 26 வது விடுதியில் 24 கட்டில்கள் மாத்திரம் காணப்படுகின்றன ஆனால் 83 கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றனர் 30வது விடுதியில் 28 கட்டில்கள் காணப்படுகின்றன ஆனால் 57 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி காரணமாக நாங்கள் நோயாளிகளை மருத்துவமனையின் தாழ்வாரங்களில் தங்கவைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அச்சம் தரும் வகையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எங்களால் சமாளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கின்றோம் என்பதை மறக்கக்கூடாது. நாங்கள் கொரோனா குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது இந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் மேலும் சில விடுதிகளை மூடிவிட்டு அதனை கொவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் எங்களை விமர்சிக்கின்றார்கள் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
கொரோனா நோயாளர்கள் குவிந்து கிடப்பது போன்று சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ராகமை வைத்தியசாலையில் எடுக்கப்பட்டதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் தனி அறைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.