மோசமான பகிடிவதை -11 பல்கலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்டது தடை
மோசமான பகிடிவதையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் மாணவர்கள் 11 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களே கடந்த 10ம் திகதி முதல் இவ்வாறு வகுப்பு தடைக்கு உள்ளானவர்கள் ஆவர்.
அழுகிய உணவளித்து உண்ணுமாறு கட்டாயப்படுத்தி
“பல்கலைக்கு அனுமதிக்கப்பட்ட புகுமுக மாணவர்களுக்கு அழுகிய உணவளித்து அதனை உண்ணுமாறு கட்டாயப்படுத்தி மனிதாபிமானமற்ற சித்திரவதை” செய்த சம்பவம் தொடர்பாகவே இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்திற்குள் இருந்த புதிய மாணவர்கள் குழுவினை இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதிக்கு அழைத்துச் சென்று, கெட்டுப்போன மற்றும் அழுகிய உணவினை சாப்பிட கொடுத்து, கடுமையாக திட்டி, தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முறையான விசாரணை நடத்தி
இந்த வகுப்புத் தடை தற்காலிகமானது என்றும், முறையான விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
