களனி பல்கலையில் பகிடிவதை - மாணவன் காவல்துறையில் முறைப்பாடு
சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தன்னை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவன் கிரிபத்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த மாணவன் விரிவுரைகளை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் 03.00 மணிக்குப் பின்னர் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண்டிருந்த வேளையில் சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாடி மற்றும் மீசையை மொட்டையடிக்குமாறும், காலணிகளுக்குப் பதிலாக செருப்புகளை அணியுமாறும், கைக்கடிகாரம் அணிவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்து மாணவனின் வெளிப்புற தோற்றத்திற்காக சிரேஷ்ட மாணவர்கள் அவரைத் தண்டித்துள்ளனர்.
மாணவன் மீது தாக்குதல்
மாணவன் அவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால், சிரேஷ்ட மாணவர்கள் அவரை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, மூன்று சிரேஷ்ட மாணவர்கள் அவரது முகத்திலும் உடலிலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் 07 சிரேஷ்ட மாணவர்கள் இருந்ததாகவும், அவர்களின் பெயர் தனக்குத் தெரியாது என்றும், அவர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் மாணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
காயமடைந்த மாணவன் ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் நீதிமன்ற மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கிரிபத்கொட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
