யுத்தத்தை வழிநடத்திய மகிந்தவே நாடு வங்குரோத்தடையவும் தலைமை தாங்கினார்! கிண்டலடிக்கும் எம்.பி
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இல்லாதொழித்தவர்கள் தான் இன்று ஜனாதிபதி உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.
ஆதரவாளர்களை அழைத்து ஊடக கண்காட்சி
இந்த சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் ஆதரவாளர்களை அழைத்து ஊடக கண்காட்சி நடத்தவில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிர்கால அரசியலுக்கான எவ்வித தேவையும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாமல் ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவினர் அரசியல் வெற்றிக்கான ஒரு நாமமாகவே கருதுகிறார்கள்.
தனது தந்தைக்காக விஜேராம இல்லத்துக்கு ஆட்களை கொண்டு வந்த நாமல் ராஜபக்ச ஜனாதிபதி உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. நாட்டு மக்களை போலியாகவே ஏமாற்றுகிறார்கள்.
அரசியல் பழிவாங்கல்
இயற்றப்பட்ட இந்த சட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்காலத்தில் செல்லுபடியாகும். ஆகவே இது அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது முறையற்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் யுத்த வெற்றியை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக முழு குடும்பத்தையும் வளப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது எந்தளவுக்கு நியாயமானது.
இவர் யுத்தத்துக்கு தலைமை தாங்கியதை போன்று நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார் என்பதை நாட்டு மக்கள் மறக்க போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அரச ஆதரவுடன் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன.
எவ்வித நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. ஊழல்வாதிகள் செல்வந்தர்களாயினார்கள். நாட்டு மக்கள் ஏழையாகினார்கள். நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு ராஜபக்சகள் பொறுப்புக்கூற வேண்டும்“ என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
