அர்ஜூன் மகேந்திரனுடன் மதிய உணவு - முற்றாக மறுக்கிறார் ரணில்
அர்ஜூன் மகேந்திரனுடன் மதிய உணவு
ஜப்பானிலிருந்து இலங்கை திரும்பும் வழியில் சிங்கப்பூரில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுடன் தான் மதிய உணவை அருந்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்றையதினம் நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டையே அதிபர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
'மகேந்திரனுடன் நான் சாப்பிடவில்லை. சிங்கப்பூர் அமைச்சருடன் காலை உணவை மட்டும் சாப்பிட்டேன், சிங்கப்பூரில் இருந்து கொழும்பு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்தபோது மதிய உணவு சாப்பிட்டேன். அநத மெனுவை எம்.பி.யிடம் காட்டலாம்'' என்றார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றுமொரு அரகல (போராட்டம்) உருவாக உள்ளது என்றார்.
ஹிருணிகாவின் பின்னால் மரிக்கார்
'இதனையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரா என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது' என ரணில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மரிக்கார், 'ஹிருணிகா பிரேமச்சந்திரவை நான் ஒருபோதும் பின்பற்றமாட்டேன் என அதிபருக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்' என்றார்.
அதற்கு, 'நீங்கள் ஹிருணிகாவைப் பின்பற்றவில்லை என்றால், என்னைப் பின்தொடர்ந்து எனக்காக வேலை செய்யுங்கள்' என்று அதிபர் பதிலளித்தார்.